தரணி எங்கும் தாகம்
தணியாத தாகம்...
விப17:3-7 உரோ 5:1-8 யோவான் 4:5-42
இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் தாகம் கொண்டனர்
தாகமாயிருக்கிறோம் என்று மோயிசனிடம் முறையிடுகின்றனர்
வெறும் தண்ணீருக்கான தாகம் அல்ல அது
விடுதலைக்கான தாகம்...
விடியலுக்கான தாகம்...
புது தேசத்திற்கான தாகம்...
புது வாழ்விற்கான தாகம்...
யாவே கடவுள் மோயீசன் வழியாக அவர்களின் தாகத்தை தணிக்கிறார்
சமாரியாவில் இயேசு பெண்ணொருத்தியிடம்
தாகமாயிருக்கிறேன் என்று முறையிடுகின்றார்
தண்ணீர் எடுக்க வந்த சமாரியப் பெண்ணும்
தாகமாகவே இருக்கின்றார்
இருவரும் தாகமாக இருந்தாலும்
இருவரின் தாகமும் வெவ்வேறானது
எந்த மலையில் வழிபட வேண்டும்
என்று கேட்கின்ற சமாரியப்பெண்ணின் தாகம்
உலக நீதிகளை, நியதிகளை
மனித மதிப்பீடுகளை
முரன்பாடுகளின் தெளிவுகளை, உண்மைகளை
அறிந்து கொள்ள முனைகிற தாகம்
இயேசுவின் தாகம்
தன்னை வெளிப்படுத்த துடிக்கிற
தரணி மீட்பு பெற உழைக்கிற
தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய தாகம்...
ஆகவேதான் உரையாடலின் துவக்கத்தில்
இயேசுவை யூதர் (யோவான் 4:9)என்று அழைக்கின்ற சமாரியப் பெண்
ஐயா என்றும் (15)
இறைவாக்கினர் என்றும்(19)
கிறிஸ்து என்றும்(25)
மெசியா என்றும்(29)
மீட்பர் என்றும்(42) இறுதியில் உணர்ந்து கொள்கிறார்.
நாமும், நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களும்
மொத்தத்தில் உலகமே – இன்று
தாகமாயிருக்கிறது....
பணத்திற்காக, பதவிக்காக
புகழுக்காக, பொருளுக்காக
உறவுக்காக, உண்மைக்காக
நிம்மதிக்காக, நிறைவுக்காக
மாண்புக்காக, மன்னிப்புக்காக
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
இத்தாகங்களைத் தணிக்க நாம்
இறைவனின் வாழ்வு தரும் தண்ணீரைத் தேடுகின்றோமா? அல்லது
வெறும் தண்ணீர் தாகத்தை மட்டும் தீர்த்துக்கொள்கிறோமா?
இன்று
இறைவார்த்தை வாழ்வு தரும் தண்ணீர்
உண்மையான வழிபாடு வாழ்வு தரும் தண்ணீர்
ஆத்மார்த்தமான ஜெபம் வாழ்வு தரும் தண்ணீர்
தியாக அன்பு வாழ்வு தரும் தண்ணீர்...
- எனது தாகம் எது?
- எனது தாகத்தை தணிக்க எதை தேடுகின்றேன்?
கீழ் காணும் பாடல் நமது தாகமாக இருக்கட்டும்.....
தாகமாய் இருக்கின்றேன் -2
உறவில் இணைந்து உயிரில் கலந்து
உனதாய் வாழவே – நான்
தாகமாய் இருக்கின்றேன்
அன்பின் சமூகம் மண்ணில் மலர தாகம் தாகமே
உயிர்ப்பில் வாழ தாகமே
வாழும் வாழ்வை நிறைவாய் வாழ தாகம் தாகமே
உன்னில் வாழ தாகமே
உன்னைப்போல ஒளியாய் வாழ-2
உனக்காய் என்னை முழுதாய் தரவே
தாகம் தாகமே – நான்
வறுமை இங்கு மறைந்து போக தாகம் தாகமே
வளமாய் வாழ தாகமே
பாரில் மனிதர் சமமாய் வாழ தாகம் தாகமே
பகிர்வில் வாழ தாகமே
ஒன்றி வாழ்ந்து உறவில் வளர்ந்து-2
உனது வழியில் மனிதம் காக்க
தாகம் தாகமே – நான்
2003-ம் ஆண்டு நான் எழுதிய இப்பாடலுக்கு இசை வடிவம் கொடுத்த அருட்தந்தை. பீட்டர் பெர்னாண்டஸ்sss அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்
பென்சி sss

- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact