Saturday, March 26, 2011 0 comments

தவக்காலம் 3-ம் ஞயிறு

தரணி எங்கும் தாகம்
தணியாத தாகம்...
விப17:3-7     உரோ 5:1-8      யோவான் 4:5-42

இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் தாகம் கொண்டனர்
தாகமாயிருக்கிறோம் என்று மோயிசனிடம் முறையிடுகின்றனர்
வெறும் தண்ணீருக்கான தாகம் அல்ல அது
விடுதலைக்கான தாகம்...
விடியலுக்கான தாகம்...
புது தேசத்திற்கான தாகம்...
புது வாழ்விற்கான தாகம்...
யாவே கடவுள் மோயீசன் வழியாக அவர்களின் தாகத்தை தணிக்கிறார்

சமாரியாவில் இயேசு பெண்ணொருத்தியிடம்
தாகமாயிருக்கிறேன் என்று முறையிடுகின்றார்
தண்ணீர் எடுக்க வந்த சமாரியப் பெண்ணும்
தாகமாகவே இருக்கின்றார்

இருவரும் தாகமாக இருந்தாலும்
இருவரின் தாகமும் வெவ்வேறானது

எந்த மலையில் வழிபட வேண்டும்
என்று கேட்கின்ற சமாரியப்பெண்ணின் தாகம்
உலக நீதிகளை, நியதிகளை
மனித மதிப்பீடுகளை
முரன்பாடுகளின் தெளிவுகளை, உண்மைகளை
அறிந்து கொள்ள முனைகிற தாகம்

இயேசுவின் தாகம்
தன்னை வெளிப்படுத்த துடிக்கிற
தரணி மீட்பு பெற உழைக்கிற
தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டிய தாகம்...

ஆகவேதான் உரையாடலின் துவக்கத்தில்
இயேசுவை யூதர் (யோவான் 4:9)என்று அழைக்கின்ற சமாரியப் பெண்
ஐயா என்றும் (15)
இறைவாக்கினர் என்றும்(19)
கிறிஸ்து என்றும்(25)
மெசியா என்றும்(29)
மீட்பர் என்றும்(42) இறுதியில் உணர்ந்து கொள்கிறார்.

நாமும், நம்மைச் சூழ்ந்து இருப்பவர்களும்
மொத்தத்தில் உலகமே – இன்று
தாகமாயிருக்கிறது....
பணத்திற்காக, பதவிக்காக
புகழுக்காக, பொருளுக்காக
உறவுக்காக, உண்மைக்காக
நிம்மதிக்காக, நிறைவுக்காக
மாண்புக்காக, மன்னிப்புக்காக
என்று அடுக்கிக்கொண்டே போகலாம்

இத்தாகங்களைத் தணிக்க நாம்
இறைவனின் வாழ்வு தரும் தண்ணீரைத் தேடுகின்றோமா? அல்லது
வெறும் தண்ணீர் தாகத்தை மட்டும் தீர்த்துக்கொள்கிறோமா?

இன்று
இறைவார்த்தை வாழ்வு தரும் தண்ணீர்
உண்மையான வழிபாடு வாழ்வு தரும் தண்ணீர்
ஆத்மார்த்தமான ஜெபம் வாழ்வு தரும் தண்ணீர்
தியாக அன்பு வாழ்வு தரும் தண்ணீர்...
  1. எனது தாகம் எது?
  2. எனது தாகத்தை தணிக்க எதை தேடுகின்றேன்?
கீழ் காணும் பாடல் நமது தாகமாக இருக்கட்டும்.....

தாகமாய் இருக்கின்றேன் -2
உறவில் இணைந்து உயிரில் கலந்து
உனதாய் வாழவே – நான்
தாகமாய் இருக்கின்றேன்

அன்பின் சமூகம் மண்ணில் மலர தாகம் தாகமே
உயிர்ப்பில் வாழ தாகமே
வாழும் வாழ்வை நிறைவாய் வாழ தாகம் தாகமே
உன்னில் வாழ தாகமே
உன்னைப்போல ஒளியாய்  வாழ-2
உனக்காய் என்னை முழுதாய் தரவே
தாகம் தாகமே – நான்

வறுமை இங்கு மறைந்து போக தாகம் தாகமே
வளமாய் வாழ தாகமே
பாரில் மனிதர் சமமாய் வாழ தாகம் தாகமே
பகிர்வில் வாழ தாகமே
ஒன்றி வாழ்ந்து உறவில் வளர்ந்து-2
உனது வழியில் மனிதம் காக்க
தாகம் தாகமே – நான்
            2003-ம் ஆண்டு நான் எழுதிய இப்பாடலுக்கு இசை வடிவம் கொடுத்த அருட்தந்தை. பீட்டர் பெர்னாண்டஸ்sss அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்
பென்சி sss
Friday, March 18, 2011 0 comments

தவக்காலம் 2-ம் ஞயிறு

மாற்றங்கள்
தொ. நூல் 12: 1-4                   2திமோ 1:8-10     மத் 17:1-9
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாத ஒன்று – ஆனால்
மனிதர்கள் மாற்றத்தை விரும்புவதில்லை
மனித மனங்கள் மாற்றத்தை ஏற்பதில்லை

இன்றைய முதல் வாசகம் இடமாற்றத்தைப் பற்றி கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் உருமாற்றத்தைப் பற்றி கூறுகின்றது.
இரண்டாவது வாசகமோ மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது.

வயதானவர்களைக் கேட்டுப்பாருங்கள்
இடம்மாறுவது எவ்வளவு கடினம் என்று கூறுவார்கள்.
உடல் எடையை குறைக்க முயல்பவர்களைக் கேட்டுப்பாருங்கள்
உருவமாற்றம் எவ்வளவு கடினம் என்று கூறுவார்கள்.

இயேசுவின் உருமாற்றம் உருவமாற்றம் அல்ல
Transfiguration is not a change of figure or change in figure
 but transcending the figure

ஆபிரகாமும் இயேசுவும் மாற்றத்திற்கு தங்களை உட்படுத்த முடிந்தது
காரணம்
அவர்களின் திறந்த மனது.

மனிதர்களும் எதிர்காலமும் இப்படித்தான் இருக்க வேண்டும் – என்ற
எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கவில்லை.
மாறாக
மனிதர்களும் எதிர்காலமும் எப்படி இருந்தாலும்
எதிர்கொள்ளும் / ஏற்றுக்கொள்ளும்
திறந்த மனது அவர்களிடம் இருந்தது.

உலகம் மாறும்
உறவுகள் மாறும்
உணர்வுகள் மாறும்
மதிப்பீடுகள் மாறும்
மாண்புகள் மாறும்
மனிதர்கள் மாறுவார்கள்
இம்மாற்றங்களை எதிர்கொள்ள, ஏற்றுக்கொள்ள
மனமாற்றம் தேவை

சில மாற்றங்களை தவிர்க்க முடியாது
கால மாற்றங்களை
பருவ மாற்றங்களை
முதிர்ச்சியின் மாற்றங்களை
முதுமையின் மாற்றங்களை
முன்னேற்றத்தின் மாற்றங்களை தவிர்க்க முடியாது

வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கு மாற்றங்கள் மாறுதல்கள் அவசியம்
அவசியமான இம்மாற்றத்திற்கு நான் தயாரா...?

எத்தகைய மாற்றங்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன்?
எத்தகைய மாற்றங்களை நான் விரும்புகிறேன்?
தவக்காலத்தில்
  1. எத்தகைய மாற்றத்திற்கு என்னை உட்படுத்தப் போகிறேன்?
  2. எத்தகைய மாற்றத்தை உலகில் கொணரப் போகிறேன்?
ஆபிரகாமின் இடமாற்றமும், இயேசுவின் உருமாற்றமும்
இத்தவக்காலத்தில்
நமது மனமாற்றத்திற்கு வழிகாட்டட்டும்.
பென்சி sss
Saturday, March 12, 2011 0 comments

தவக்காலம் 1-ம் ஞயிறு

தொ நூல் 2:7-9; 3:1-7           உரோ 5:12-19         மத் 4:1-11
சோதனைகளை வென்றிடுவோம்
இயேசுவின் சோதனைகளை பற்றி சிந்திப்பதைவிட  அவர் எவ்வாறு சோதனைகளை வென்றார் என்று சிந்திப்பது தான் பொருத்தமானது.
இயேசுவுக்கும் சாத்தானுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் எப்படி நற்செய்தியாளர்களுக்கு தெரிய வந்தது என்ற ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது...
புத்திசாலித்தனமான கேள்வி ஆனால் பொருத்தமான கேள்வியா?
சோதனைகள் வாழ்க்கையில் சகஜம். சோதனைகளே இல்லாத வாழ்க்கையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் வாழ்க்கையில் வருகின்ற சோதனைகளை வென்றிட முடியும்.
சோதனைகளை வெல்லுவது எப்படி
  1. எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் வேண்டும்
  2. அந்த வாழ்க்கையை அடைய / பெற எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.
  3. எத்தகைய சூழலிலும் தேர்ந்து கொண்ட இவ்வாழ்க்கை முறையிலிருந்து தவற மாட்டேன் என்ற உறுதி வேண்டும்
இம்மூன்று குணங்களும் நம்மிடம் இருக்குமெனில் இயேசுவைப்போல் நம்மாலும் எத்தகைய சோதனைகளையும் கடந்து வர முடியும். காரணம்..
இவைகள் இருந்தது என்றால் மனது அலைபாயாது
தேவையற்ற சோதனைகளும் வராது
சோதனைகள் வந்தாலும் கடந்து செல்ல நம்மால் முடியும்
சிந்திக்க
·         அதிகமாக நான் சந்திக்கின்ற சோதனைகள் எவை?
·         அதற்கான காரணங்கள் என்ன?
·         இச்சோதனைகளை வெல்ல நான் எடுத்த முயற்சிகள் என்ன?
·         இவைகளால் நான் கற்ற பாடங்கள் என்ன?
·         இச்சோதனைகளில் இருந்து முழுமையாக வெளியேற இத்தவக்காலத்தில் என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறேன்?
பென்சி sss
Tuesday, March 8, 2011 0 comments

விபூதிப்புதன்

தவக்காலத்தை நம்மில் சிலர்
·         சேமிப்புக்காலமாக,
·         தம்பட்டக்காலமாக
·         நடிப்புக்காலமாக
·         உடல் எடையை குறைக்கும் காலமாக
·         நேரத்தை மிச்சப்படுத்தும் காலமாக பார்க்கின்றோம்.
ஆனால் நம்மில் எத்தனை பேர் தவக்காலத்தை ஒரு
Ø  தவத்தின் காலமாக,
Ø  தயாரிப்புக்காலமாக
Ø  உறவின் காலமாக பார்க்கின்றோம்.
தவத்தின் காலம்
தவக்காலம் என்ற உடன் ‘பரிகாரம்’  ‘ஒறுத்தல்’ ‘வேதனை’ இவைகள் தாம் நமது மனதிற்கு வருகின்றது. It is not a season of / for penance. தவக்கால திருப்பலியின் முதல் தொடக்கவுரை தவக்காலத்தை மகிழ்ச்சியின் காலமாக சித்தரிக்கின்றது. தவம் என்பது ஐம்பலன்களின் அடக்கம். இக்காலத்தில் நம் ஐம்புலன்களையும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து நெறிப்படுத்த வேண்டிய காலம்.
தயாரிப்புக்காலம்
தொடக்கத்தில் உயிர்ப்புப் பெருவிழாவிற்கான தயாரிப்புக்காக ஒரு நாள்  நோன்பு மட்டும் தான் இருந்தது. ஆனால் பின்னர் அதுவே படிப்படியாக  இரண்டு நாட்கள், ஏழு நாட்களென்று இறுதியாக நாற்பது நாட்களாக மாறியுள்ளது.இயேசு பாலைவனத்தில் கழித்த நாற்பது நாட்கள் இதற்கு ஆதாரமாக நிற்கின்றது.
இந்த நாற்பது நாட்களும் திருச்சபையின் முதன்மையான விழாவான உயிர்ப்பு விழாவிற்கு தயாரிக்கின்ற காலமாக திருச்சபை தந்துள்ளது.
உறவின் காலம்
தவக்காலம் அர்த்தமுடன் இருந்திட திருச்சபை நம்மை நோன்பு இருக்கவும், தானம் செய்யவும், ஜெபிக்கவும் அழைக்கின்றது. இவை மூன்றுமே உறவினை வலுப்படுத்துகின்றது.
நோன்பு          - என்னொடு உள்ள உறவினை வளர்க்கின்றது
தானம்            - பிறரோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஜெபம்            - கடவுளோடு உள்ள உறவினை வளர்க்கின்றது
ஆக இந்த தவக்காலத்தை
                                    தவத்தின் காலமாக
                                    தயாரிப்பின் காலமாக
                                    உறவின் காலமாக   மாற்றுவோம்.
பென்சி sss
Saturday, March 5, 2011 0 comments

9-வது ஞாயிறு

அடித்தளம்
இணைசட்டம்11:18, 26-32  உரோ 3:21-28  மத் 7:21-27
பாலஸ்தீனத்தில் கோடைகாலத்தில் சிறு ஆறுகள் வற்றிவிடும். அவ்வாறு வற்றிப்போன ஆற்றுப் படுகைகளில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காதவர்கள், திட்டமிடாதவர்கள், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கண்டால் போதும் என்ற மனநிலை உள்ளவர்கள் எதைப்பற்றியும் யோசிக்காமல் அங்கு வீடு கட்டி குடியேறிவிடுவர். கோடைகாலம் முடிந்து மழைக்காலம் வரும் போது, ஆறு பெருக்கெடுத்து ஓடும் போது, ஆற்றின் படுகைகளில் கட்டப்பட்ட வீடும் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு விடும்.
மற்ற சிலரோ கட்டப்படுகின்ற வீடு காலத்திற்கும் நிற்க வேண்டும் என்று கற்பாறையை அடித்தளமாக  கொண்டு வீட்டை கட்டி முடிப்பர். கற்பாறையை அடித்தளமாக கொண்ட இவ்வீடுகள் இயற்கை சீற்றத்திலிருந்து காக்கப் பட்டுவிடும்.
இயேசு கூறுகின்ற இந்த உவமையில் வீடு என்பது நமது வாழ்வு. நமது வாழ்வின் அடித்தளமாக எது அமைந்துள்ளது என்ற கேள்வியைத் தான் இயேசு எழுப்புகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம் கடந்த சில வாரங்களாக நாம் சிந்தித்துவந்த மலைப்பொழிவு பகுதியின் இறுதியாக வருகின்ற நிறைவுப் பகுதியாகும்.
மலைப்பொழிவில் இயேசு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்வுப்பாடங்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் வாழ்வு என்ற வீடு கட்டப்பட வேண்டும்.
 “என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர் பாறை மீது தம் வீட்டைக்கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்” மத்7:24
ஆக இறைவனின் வார்த்தையை கேட்பதோடு நின்று விடாமல் அவற்றை செயல்படுத்தவும் இன்றைய வாசகம் நம்மை அழைக்கின்றது.
நமது விசுவாசம் சொற்களில் அல்ல செயல்களில் வெளிப்படவேண்டும்.
பெயரளவில் வாழுகின்ற வார்த்தைக் கிறிஸ்தவர்கள் இன்று பெருமளவில் நம்மிடையே உள்ளனர். ஆனால் இயேசுவுக்கு சான்று பகர்கின்ற சாட்சிய வாழ்வு வாழுகின்ற செயல் கிறிஸ்தவர்கள் தாம் இன்று நமக்கு தேவை.
“வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்” – இந்த வாக்கியத்தை ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா என்றால் “கீழ்படிதல்” என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம்.
கீழ்படிதல் என்பது ‘கேட்டு அதன் படி நடத்தல்’.
ஆக இறைவனுக்கு கீழ்படிந்திட அழைக்கப்படுகின்றோம்.
இறைவார்த்தைக்கு கீழ்படிந்திட அழைக்கப்படுகின்றோம்.
நான் இன்று யாருக்கு கீழ்ப்படிகின்றேன்?
எனது வாழ்வின் / செயல்களின் அடித்தளம் எது?
இக்கேள்விகள் நாம் நுழைய இருக்கின்ற தவக்காலத்தின் அர்த்தத்தினை ஆழப்படுத்திடும் என்பதில்  ஐயமில்லை.
பென்சி sss
 
 
;